Tuesday, October 22, 2013

உண்மை நட்பை உணர்த்திருக்கிறீர்களா நீங்கள்..

                                                        ஏக இறைவனின் திருப்பெயரால்..  


அல்லாஹ் தான் என் இறைவன்.அவனே அகில உலகையும் படைத்து பரிபாலிக்க கூடியவன் என்ற சத்திய மந்திரத்தை சொன்னதற்காகவா என் உத்தம தோழரை நீங்கள் கொலை செய்ய பார்த்தீர்கள்..??

அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் அத்துமீறிய சமுதாயமகவே இருக்கிறீர்கள்....

என்று சொல்லும்போதே அபுபக்கர் (ரலி) அவர்களின் மீதும் பாய்ந்து கடுமையான தாக்குதல் தொடுக்கிறார்கள் அந்த குறைஷி கயவர்கள்.தலையில் பலமான ரத்த காயம் ஏற்பட்டு கீழே விழும் அவரையும்,ஏற்கனவே அவர்களால் தாக்கப்பட்டு ஒருபுறம் மூர்ச்சையாகி கிடந்த அவரின் அருமைத் தோழரான அண்ணலாரையும் அவர்களது உறவினர்கள் ஓடிவந்து மீட்டெடுக்கிறார்கள்,,

தனக்கு அடிகளும் அவமானங்களும் ஏற்பட்ட அந்த நேரத்திலும் கூட அதை சற்றும் பொருட்படுத்தாமல்,
சத்தியத்தை சொன்னதற்காக தன் உத்தம தோழர் மீது அத்துமீறி விட்டார்களே என்ற கவலையில் அவரின் நலத்தை தன் தாயிடம் விசாரித்துகொண்டும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரான தன் தோழரையும் கண்ணியப்படுத்திக் கொண்டும் இருக்கிறது நட்பின் ஒருபுறம்..

சத்தியத்தை சொன்னதற்காக தன்னை தாக்கியது கூட பெரிதல்ல..அதை ஏற்றுக்கொண்டதற்காக தன் தோழரை தாக்கிவிட்டார்களே என்ற கவலையிலும், வேதனையிலும் ஆழ்ந்தது நட்பின் மறுபுறம்..

மறுநாள் காலையில் தன்னால் தன் தோழருக்கு அடியும் அவமானமும் ஏற்பட்டுவிட்டதே.அவரின் வாடிய முகத்தை நான் எங்கனம் காண்பேன் என்று அச்சம் கலந்த எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்த அண்ணாலாரின் முன்னிலையில்...

"அஸ்ஸலாமு அலைக்கும் யா ரஸூலல்லாஹ்" என்று அழகிய முகமனோடும் மலர்ந்த முகத்தோடும் வந்து நின்ற தன் தோழரை
ஆச்சர்யத்தோடும், ஆர்வத்தோடும் ஆரத்தழுவி  நலம் விசாரித்துகொண்டார்கள் அண்ணலார் அவர்கள்..

நேற்று தனக்கு தன் நண்பரால் நேர்ந்த அடியையும் அவமானங்களையும் சற்றும் தன் முகத்தில் வெளிப்படுத்தாத அபுபக்கர்(ரலி) அவர்கள், மலர்ந்த முகத்தோடு வந்தது மட்டுமின்றி...

அல்லாஹ்வின் தூதரே..என் தாய் சத்திய மார்க்கத்தை ஏற்க வந்துள்ளார் என்று வாஞ்சையோடு கூறியதிலிருந்து அபுபக்கர் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நட்பின் சிகரம் தெரிகிறது.

அல்லாஹு அக்பர்..

இதுவே அருமையான நட்புக்கு இலக்கணமாகும்.
எல்லா விஷயங்களை போலவே நபிகள் நாயகத்தின் வரலாற்றில் நட்புக்கும் ஒரு சிறந்த முன்மாதிரி உள்ளது..

அல்லாஹ்வின் தூதருடன், அபுபக்கர்(ரலி) அவர்கள் இருந்த அனைத்து சம்பவங்களையும் படித்துப் பாருங்கள்.அர்த்தமுள்ள நட்பின் நறுமணத்தை உணர்வீர்கள்...

No comments:

Post a Comment